Friday, December 5, 2014

தனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் 2

தனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் 2

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...

ராமேஸ்வரமும் மற்ற பகுதிகளும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப ஆரம்பித்திருந்தாலும், தனுஷ்கோடி முழுவதுமாய் அழிந்திருந்தது. இந்நேரத்தில் பத்திரிகைகள் வேறுவிதமான ஒரு பீதியைக் கிளப்பின, "தனுஷ்கோடி புயலில் சிக்கிய ஜெமினி கணேசனும் அவரது மனைவி சாவித்திரியும் மாயம்". தமிழகமெங்கும் இந்த செய்தி இன்னும் பரவலாகப் பேசப்பட்டது. தங்களுக்கு எதுவும் ஆகவில்லை தாங்கள் நலமாக இருப்பதாக ஊடகங்களின் வாயிலாக தகவல் அறியப்பட்டதுமே தமிழகம் அந்தப் பீதியில் இருந்து தெளிந்தது. இருந்தும் புயலின் தாக்கம் பற்றி இவர்கள் கூறிய கருத்துக்கள் தனுஷ்கோடி வரலாற்றில் மிக முக்கிய இடம் பிடிக்கின்றன.



டிசம்பர் 22 மாலை, ஜெமினியும் சாவித்திரியும் தனுஷ்கோடி கடலில் புனித நீராடிவிட்டு அவர்கள் தங்கியிருந்த அறைக்கு திரும்பும் பொழுதே காற்றின் வேகம் மிகவும் பலமாக இருந்தது. மழையும் விடாமல் பெய்து கொண்டிருந்தது. அன்றைய இரவுப் பொழுதை தனுஷ்கோடியில் வேண்டும் என்பது சாவித்திரியின் விருப்பம். விடாது அடித்த காற்றும் அடைமழை கொடுத்த எச்சரிக்கையும் ஜெமினியை தனுஷ்கோடியில் இருக்கச் சம்மதிக்கவில்லை. சாவித்திரி எவ்வளவோ கேட்டுக்கொண்டும் ஜெமினி கண்டிப்புடன் எச்சரிக்கவே அன்றைய மாலை ரயிலில் ராமேஸ்வரம் கிளம்பிச் சென்றுவிட்டனர்.

தனுஷ்கோடிக்கு முன்பே புயல் தலைமன்னாரை நெருங்கி இருந்தது. தலைமன்னாரும் பல ஆயிரம் உயிர்களை புயலுக்கு காவு கொடுத்திருந்தது. தலைமன்னார் கடலில் கலந்த உயிர்கள் தனுஷ்கோடி கரையில் உடலாக ஒதுங்கத் தொடங்கியிருந்தது.

புயலைப் பற்றி ஜெமினி மற்றும் சாவித்திரி பின்வருமாறு குறிபிடுகிறார்கள் :

"ஓயாம காத்து அடிச்சிட்டே இருந்தது. நிறைய நரி ஊளையிடற சத்தம் விடாம கேட்டுதே இருந்தது. புயல் காத்து அப்புறம் நரி ஊளையிடுற சத்தம், மழை எல்லாமே சேர்ந்து ஒருவித திகலாவே இருந்தது. சினிமால தான் இந்த மாதிரியான காட்சிகள் இருக்கும். அன்னைக்கு நைட் எங்களால தூங்கவே முடியல."

"அடுத்த நாள் காலைல தனுஷ்கோடி மக்கள் எல்லாரும் ராமேஸ்வரம் நோக்கி ஓடிவாறாங்க. அவங்க நிலமைய பார்த்தப்போ தான் புயலோட தீவிரம் முழுசா தெரிஞ்சது. அவங்க எல்லாரும் கையில பிணங்கள தூக்கிட்டு ஓடி வந்தாங்க. அந்தக் காட்சிய பாக்குறதுக்கே கொடூரமா இருந்தது." தங்கள் பேட்டியில் ஒருவித மிரட்சியுடன் அந்த காட்சியை விவரித்து இருகிறார்கள்.


ராமேஸ்வரம் ரயில்வே அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலை தங்களுக்காக பாம்பன் வரை முடியுமா என்று கேட்டுள்ளனர். இருந்த நிலகரிகள் அனைத்தும் புயல் மழையோடு சென்று விட்டதால் எரிபொருள் இல்லை என்று கூறி கையை விரித்துவிட்டனர் . அதன்பின் பேரிழப்பைப் பார்வையிட வந்த முதல்வரை சந்தித்து ஜெமினி தங்கள் நிலைமையை எடுத்துக் கூற அவரும் உதவி செய்வதாக கூறியுள்ளார். பின்பு ஒருவழியாக அவர்கள் பாம்பன் வந்து அங்கிருந்து மோட்டார் படகு மூலம் ராமநாதபுரம் வந்து பின் மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்துள்ளனர். ராமஸ்வரத்தில் இருந்து புறப்படுவதற்கு முன் தங்கள் கையிலிருந்த ஆயிரம் ரூபாயையும் அங்கிருந்த மக்களுக்காகக் கொடுத்துவிட்டுத் தான் வந்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் தங்கியிருந்த ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியைப் பார்ப்பதற்கு வந்திருந்த தனுஷ்கோடி மக்கள் புயலில் இருந்து தப்பித்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். அப்படித் தப்பித்தவர்களில் ஒருவர் கூறுகிறார் " அன்னிக்கு மட்டும் நான் ராமேஸ்வரம் போகாம இருந்திருந்தா என் பொண்டாட்டி புள்ளைங்கள காப்பாத்தி இருப்பேன், இல்ல அதுங்களோட சேர்ந்து ஒரேடியாப் போயிருப்பேன்" தன்னைச் சந்திக்கும் பலரிடமும் இந்த வார்த்தைகளையே கூறிக் கொண்டுள்ளார்.




அன்றைய தினம் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல் இன்றுவரை கிடைக்கவில்லை. மணலில் புதைந்த பிணங்களும், கடலில் மிதந்த பிணங்களும் ஏராளம். அவற்றைத் தேடி எடுக்க மீட்புப் பணியினரால் முடியவில்லை. மேலும் பல உடல்கள் கழுகுகளாலும் மிருகங்களாலும் வேட்டையாடப்பட்டதால் அவர்களை இனங்கான முடியாமல் போயிற்று.

மக்கள் வாழ்வாதரங்களை இழந்த நிலையில் அரசு தனுஷ்கோடியை மக்கள் வாழத் தகுதியற்ற நகரம் என்று அறிவித்தது. தன்னுடைய அத்தனை அடையாளங்களையும் அன்றைய ஒருநாள் புயலில் மொத்தமாக இழந்தது தனுஷ்கோடி. ரயில்நிலையம், தபால்நிலையம், தந்தி ஆபீஸ், சுங்கச் சாவடி, மாநிலத்தின் முக்கியமான துறைமுகம் மற்றும் மீன்பிடி நிலையம் என்று தனது அன்றாட வாழ்கையை இழந்து மக்கள் வாழத் தகுதியற்ற என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

மூன்று மாதத்திற்கு முன்பு பார்த்த தனுஷ்கோடிக்கும் சமீபத்தில் பார்த்த தனுஷ்கோடிக்கும் பூகோள சுழற்சியின் காரணத்தால் நிறையவே மாற்றங்கள் இருந்தன. தனுஷ்கோடி மேல் ஈர்ப்பு வருவதற்கு இது போன்ற மாற்றங்களும் மிக முக்கியமான காரணிகள். முதன் முறை தனுஷ்கோடி வந்தபொழுது ராமேஸ்வரத்தை சேர்ந்த எனது நண்பன் சுந்தர் ராமனும் உடன் வந்திருந்தான். சுந்தர் தனுஷ்கோடி பற்றி கூறிய முக்கயமான விசயங்களைக் கூற வேண்டி இருப்பதால் அவனது வருகையை இங்கே பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது.



ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் பாதையில் அமைந்துள்ளது கோதண்டராமர் கோவில், ராவண வதத்திற்குப் பின் ராமர் விபீடணனுக்கு இங்கு வைத்து தான் பட்டாபிசேகம் செய்து வைத்துள்ளார். நான் கூற விளைவது அதுவல்ல. கோதண்டராமர் கோவிலைச் சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடற்கரை மணல் நிரம்பி இருக்கும். அந்த கோவிலில் தரிசனம் முடித்துத் திரும்பும் பொழுது சுந்தர் விசித்திரமாக ஒரு விஷயம் சொன்னான்.

"இப்ப இந்த இடம் எவ்ளோ காஞ்சு போய் இருக்கு, இன்னும் கொஞ்ச மாசத்துல இந்த இடம் முழுசும் கடல் உள்ள வந்தரும், இப்பவாது கோவிலுக்கு போறதுக்கு ரோடு போட்ருகாங்க, சின்ன வயசுல கடல் தண்ணி இருக்குற சமயம் கோவிலுக்கு போகவே முடியாது. ரொம்ப கஷ்டப்பட்டு தான் போவோம்".


இந்த வார்த்தைகளை சத்தியமாக நாங்கள் யாரும்  நம்பி விடவில்லை. இந்த முறை தனுஸ்கோடி சென்றிருக்கா விட்டால் நிச்சயமாக அவன் வார்த்தைகளை நம்பியும் இருக்க மாட்டேன், சுந்தர் ஏதோ கதை விடுவதாகத் தான் நினைத்திருப்பேன்.


மூன்று மாதத்திற்கு முன் சென்ற பொழுது  தனுஷ்கோடி செல்லும் வழியெல்லாம் மணல் நிரம்பிய  அழகான கடற்கரையைத் தான் காண முடிந்தது. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் "கன்னத்தில் முத்தமிட்டால்" பாடலில் தனுஷ்கோடி கடற்கரை எவ்வளவு அழகாகக் காட்டியிருப்பர்களோ அத்துணை அழகாக இருந்தது. ஆனால்  இம்முறை செல்லும் பொழுதோ தலைகீழ் மாற்றம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் நீர் மட்டுமே காட்சியளித்தது. கடல்நீரைத் தொடர்ந்து கடல் காட்சியளித்தது. நான் அண்ணன் தம்பி மூவருமே இம்முறை அந்தக் காட்சியை வித்தியாசமாய்ப் பார்த்தோம், காரணம் எங்களைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் முதன்முறை அவ்வழியே பயணிக்கிறார்கள். சமீபத்தில் மழை பெய்திருந்ததால் அந்த மழை நீர் தான் தேங்கி இருக்க வேண்டும் என்று நினைத்தோம், பின்பு தான் தெரிந்து கொண்டோம், அது மழை நீர் இல்லை கடல் நீர் என்று. இதற்கான அறிவியல் பூர்வமான காரணத்தை சற்று தாமதித்துப் பாப்போம். அதற்கு முன் வேறு சில காட்சிகளைப் பார்த்துவிடுவோம்.

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி பதினான்கு கி.மீ தொலைவில் உள்ளது. செல்லும் வழியில் வலப்புறம் வெகு அருகில் இந்தியப் பெருங்கடலையும், இடப்புறம் வங்கக் கடலையும் கொண்டுள்ளது. சீரும் இந்தியைப் பெருங்கடல் ஆண்கடலாகவும், பொறுமையாய் அலையற்றதாய் இருக்கும் வங்கக் கடலை பெண் கடலாகவும் குறிப்பிடுகிறார்கள்.

ராமேஸ்வரத்திற்கு நாங்கள் காரில் சென்றிருந்ததால் அதே காரிலேயே தனுஷ்கோடி முழுவதையும் சுற்றிப் பார்த்துவிடலாம் என்ற நப்பாசையில் தான் தனுஷ்கோடி செல்லும் வழியின் பாதி தூரம் வரை சென்றோம். மூன்று மாதத்திற்கு முன்பு இருந்த வழிகள் இன்று இல்லை, அவை கடல் நீருக்குள் ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளன. மேலும் அந்த வழியாக சென்றால் மட்டுமே இரு கடலும் சங்கமிக்கும் இடத்திற்கு செல்ல முடியும். சென்ற முறை தனுஷ்கோடியின் அழிவுச் சின்னங்களை பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருக்கவில்லை . இம்முறை அவற்றை கண்டிப்பாக பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் தான் களம் இறங்கியிருந்தோம். தனுஷ்கோடி செல்லும் பாதை முழுவதையும் கடல்நீர் தன் வசம் வைத்திருந்ததால் நாங்கள் சென்ற கார் அவ்வழி செல்ல முடியாது என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டது.


அந்த இடத்தில இருந்து தனுஷ்கோடி வரை செல்வதற்கு ஜீப் வேன் அல்லது டெம்போ வசதி உண்டு. வேன் மற்றும் டெம்போவில் நபருக்கு நூறு ருபாய் கட்டணம். அதிக கட்டணம் வசூலித்தால்புகார் அளிப்பதற்கு என்று  தொடர்பு எண்ணும் கொடுத்து இருகிறார்கள். குறைந்தது இருபது நபர் சேர்ந்தால் மட்டுமே வண்டியை நகற்றுகிறார்கள், இருபதிற்கும் மேல் ஆட்கள் சேர்ந்தால் சந்தோசத்துடன் வண்டியை சீறிக் கொண்டு கிளப்புகிறார்கள். தலைக்கு நூறு ரூபாய் கொடுத்து தனுஷ்கோடி செல்வதற்கு முதலில் எங்கள் குடும்பம் உடன்படவில்லை.சற்று யோசிக்கத தொடங்கியது. சிறிதும் யோசிக்கக் கூடாது இவ்வளவு தூரம் வந்துவிட்டு தனுஷ்கோடியைப் பார்க்கமால் போவதா என்று நான் கொடி பிடிக்கவே, மற்றுமொரு குடும்பத்தையும் ஏற்றிக்கொண்டு கிளம்பியது எங்கள் டெம்போ.

டெம்போ நிரம்பி வழிய,  சாகசங்களை விரும்பும் என் போன்ற ஐந்து பேர் சர்கஸில் கயிற்றைப் பிடித்துத் தொங்குவது போல டெம்போவில் பேக்போர்ட் (பூட்போர்ட்) அடிக்கத் தொடங்கினோம். கரணம் தப்பினால் மரணம் இல்லை குட்டிக்கரணம் மட்டுமே அடிக்க வேண்டியிருக்கும் அதுவும் பட்டு போன்ற மிருதுவனா மணலில் என்பதால் அடிபடும் வாய்ப்பு குறைவு. இருந்தும் நிலமும் நீரும் சங்கமிக்கும் இடம் வழியே டெம்போவானது அம்பாரி போல் ஆடி ஆடி செல்ல ஆரம்பித்த அதே நிமிடம் சுவாரசியமான சற்றே திகில் நிறைந்த எங்களது தனுஷ்கோடி பயணமும் ஆரம்பமாகியது.

கடற்கரை மணல் சூழ்ந்த பகுதிகள் அனைத்தும் கடல்நீரால் சூழப்பட்டு இருந்தது ஆச்சரியம் என்றால், சென்ற முறை ஆர்பரித்துக் கொண்டிருந்த இந்தியப் பெருங்கடலோ இம்முறை குறைவான அலைகளுடன் அமைதி காத்துக் கொண்டிருந்தது. டெம்போவின் நடத்துனரிடம்(!) இருந்து என் புலன் விசாரணை தொடங்கியது.



இந்தியப் பெருங்கடலில் காற்றடிக்கும் ஆறு மாத காலமும்  இந்தியப் பெருங்கடலானது  ஆக்ரோசமாகவும், வங்காளவிரிகுடா அமைதியானதாகவும் இருக்கும், வங்காள விரிகுடாவில் காற்றடிக்கும் பொழுது அகன்ற நீளமான அந்தக் கடற்கரை முழுவதுமே கடல் நீர் கொண்டு நிரப்பட்டு இருக்கும். இந்தக் காலங்களில் வங்காள விரிகுடாவிலும் அலையின் வேகம் சற்றே அதிகமாய் இருக்கும். மேலும் கடற்கரை நீரால் சூழப்பட்டு இருக்கும் இது போன்ற காலங்களில், இரு கடலும் சங்கமிக்கும் இடத்திற்கு நம்மால் செல்ல முடியாது. (முதல்முறை சென்ற பொழுது இருகடல்கள் சங்கமிக்கும் இடத்திற்கு சென்ற பாக்கியவான்கள் ஆனோம் என்பது குறிப்பிடத்தக்கது).

மூன்று கி.மீ பயணம் தான், ஆனால் அதைக் கடக்கவே கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் ஆகியது. புதிதாக பரவி இருந்த கடல் நீர், வழித்தடம் அனைத்தையும் இல்லமால் செய்திருந்தது. இருந்தும் பல வருடங்களாக வண்டி ஓட்டும் ஜாம்பவான்கள் என்பதால் தங்களுக்கான பாதையை லாவகமாக ஏற்படுத்திக் கொண்டு முன்னேறிச் செல்கிறார்கள். மணலுக்குள் புதைந்து உருளும் சக்கரங்கள் சில சமயங்களில் எப்போது வேண்டுமானாலும் நம்மை கவிழ்த்தி விடலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொண்டே இருந்தன. நம் வாகனம் செல்லும் தடத்தின் எதிரில் ஏதேனும் வாகனம் வந்தால் டிரைவரின் நிலைமை கொஞ்சம் தான். கிரைண்டரில் புதிதாக போட்ட அரிசியை அரைப்பதற்கு கஷ்டப்படும் ஆட்டுக்கல்லை போல் ஸ்டியரிங்கை சுற்றி சுற்றி வளைத்து  தனக்கான புதிய தடத்தைப் பதித்து முன்னேறிச் செல்ல வேண்டும். உள்ளிருக்கும் நமக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம் என்றாலும் வண்டி ஓட்டும் மனிதர்களுக்கு அது தான் வாழ்க்கை.

பெரும்பாலான நேரங்களில் டெம்போவின் ஒரு பகுதி சக்கரங்கள் நீருக்குள் அமிழ்ந்து போன மணலுக்குள் தான் தான் உருளுகின்றன, எப்போது வேண்டுமானுலும் கவிழ்ந்து விடலாம் என்கிற அச்சத்திலேயே சக்கரங்கள் நம்மை தனுஷ்கோடி வரை கொண்டு செல்கின்றன. இந்த டெம்போ பயணம் நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

தனுஷ்கோடி பூர்வகுடி மக்களுக்கு  இது போன்ற டெம்போக்களும் வேன்களும் மட்டுமே போக்குவரத்து காரணிகள், இவர்களிடம் பத்திலிருந்து இருபது ரூபாய் வரை வரை பெற்றுக்கொண்டு அழைத்துச் செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் வராத காலங்களில் எந்தவிதமான வாகனப் போக்குவரத்தும் நடைபெறாது. தனுஷ்கோடி நடந்தே செல்ல வேண்டும். இங்கு ஒரு சிறிய பள்ளிக் கூடம் ஒன்றும் உள்ளது, தனுஷ்கோடி வாழ் மீனவர்களின் குழந்தைகள் மட்டுமே இங்கு படிகிறார்கள். ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் தினமும் வந்து செல்கிறார், வாகனங்கள் இல்லா நாட்களில் நடந்தே வந்து செல்கிறார். அவசர சிகிச்சை, பிரசவ காலங்கள் என்று எதுவாக இருந்தாலும் விடிந்ததும் தான் இவர்களால் ராமேஸ்வரம் செல்ல முடியும். திடிரென்று புயல் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டால் கூட நடந்து தான் ராமேஸ்வரம் வரவேண்டி இருக்கும் என்பது மற்றுமொரு கொடுமையான விஷயம்.



தனுஷ்கோடியின் ஒரு இடிந்த கட்டிட தரைமட்டதின் மேல் டெம்போ நின்றது, எங்களுக்கு முன் சென்ற வாகனங்களும் இனி வரப் போகும் வாகனங்களும் இங்கு தான் நிற்கும். ஒரு காலத்தில் தனுஷ்கோடி வரும் ரயில்கள் நிற்கும் அதே இடத்தில இன்று டெம்போக்கள் வந்து நம்மை இறக்குகின்றன, புயலால் கொண்டு செல்லப்பட்ட ரயில்நிலையத்தின் மிச்சம் தான் தற்போது இந்த டெம்போக்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கும் இடம். நகரத்தின் மீது நம் காலடி படும் முதல் இடமான இந்த ரயில் நிலையமே நம்முள் இனம் புரியாத ஏதோ ஒரு வித உணர்வை ஏற்படுத்துகிறது.

ரயில் நிலையத்தின் மிக அருகில் புயலில் இருந்து தப்பிப் பிழைத்த ஒரு முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் பூசாரி எங்களிடம் பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டார். எந்தக் காலத்திலோ தினமணி பேப்பர் தனுஷ்கோடி பற்றி அச்சிட்ட செய்திகளை இன்றும் மிகப்பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார். தனுஷ்கோடியின் பழைய கதைகளைக் கேட்பவர்களிடம் எல்லாம் சளைக்காமல் பதில் கூறுகிறார், தன்னிடம் இருக்கும்  நாளிதழையும் காண்பிகிறார். முனீஸ்வரன் கோவிலுக்கு பின்புறமாக அவர் கைகாட்டிய திசையில் துறைமுகம் இருந்ததாகக் கூறுகிறார், அவரது தாத்தா அங்கு வேலை செய்ததை அத்தனை பெருமையாகக் குறிபிடுகிறார்.  புயல் அடித்த தினத்தன்று பெரும்பாலான அவரது சொந்தங்கள் காணாமல் போய்விட்டார்கள் என்பதையும் குறிப்பிட அவர் மறக்கவில்லை.



மக்கள் வாழத் தகுதியற்ற என்று முத்திரை குத்தப்பட்ட தனுஷ்கோடியில் இன்று இருநூறு குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு மின் இணைப்பு கிடையாது. இவர்களது இரவும் பகலும் மின்சாரம் இல்லாமல் தான் கழிகிறது, கருக்கல் நேரங்களில் சிமினி விளக்குகள் மட்டுமே தனுஷ்கோடிக்கு வெளிச்சம் தருகின்றன. "ராமேஸ்வரத்துக்கு போனா தான் நாங்க லைட்ட பாக்க முடியும்" என்றார் என்னுடன் உரையாடிய ஒரு பெரியவர். சிலரிடம் ரேடியோ இருக்கின்றன, சிலரிடம் மொபைல் இருக்கிறது, சிக்னல் கிடைப்பது இல்லை, பாடல் கேட்கும் சாதனமாக அதைப் பயன்படுத்துகிறார்கள்.

அடிப்படை வசதி என்று எதுவும் கிடையாது, கடற்கரை மணலில் சில அடி ஆழத்தில் நன்னீர் ஊற்றுகள் இருக்கின்றன, இந்த நீரூற்றுக்கள் தான் இவர்களது நீர் ஆதாரம். சமையல் பொருட்கள் அனைத்தையும் ராமேஸ்வரத்தில் இருந்தே வாங்கி வருகிறார்கள். இங்கு இருப்பவர்கள் அனைவரும் காலங்காலமாக தனுஷ்கோடியில் வாழ்ந்து வரும் மீனவர்கள். மீன்பிடி தொழில் போக கடல் சிப்பிகளைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்தும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இந்த இடத்தைவிட்டு செல்ல இவர்களுக்கு மனம் இடங்கொடா காரணத்தால் இங்கேயே தங்கி விட்டனர். வெளியிடத்து மக்கள் பெண் எடுக்கவும் கொடுக்கவும் அச்சப்படுவதால் திருமணங்கள் கூட தனுஷ்கோடிக்கு உள்ளேயே நடக்கின்றன.



சுற்றுல்லாத் தலமாக்கவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும் மற்றுமொரு புயல் தாக்கி இதைவிட இன்னும் மோசமான அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக்கூடாது என்று அரசாங்கம் பயப்படுவதால் தனுஷ்கோடியின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே இருக்கிறது.

வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தனுஷ்கோடி சென்று வாருங்கள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பயணமாக தனுஷ்கோடி இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

முதல்முறையாக ஒரு தொடரை முழுமையாக நிறைவு செய்வதற்கு ஊக்கம் அளித்த அத்தனை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

No comments:

Post a Comment

welcome ur comment,